அந்தக இரவு..
அவஸ்தைகள் எரிக்கும் அந்தக இரவுகளில்
கொட்ட விழித்திருக்கிறதென் துயரம்.
மண்ணுளி அரவாய் மறுப்பில் ஒளித்து
நிஜத்தில் சுயமும் நிலத்தில் புதையும்..
நாற்புறம் தாங்கும் கால்கள் விலகிட
அதுவரை தாங்கிய கூரைகள் சரியும்.
சுழல் சூறைக் காற்றில் ஒரு
அகல் காத்தென் தினம் தினம் கழியும்..
அனல் ஆற்றில் நீந்தற் போலும்
சுடும் வெப்பம் உடல் சாரும்.
கை விடல் மாட்டேன் எனுமுறுதி
கழுத்தினை மேலும் மேலாய் இறுக்கும்.
விழித்திருக்கும் போதில் கூட
வீர்யமாய் பகை விழி குத்தும்.
தனித்திருக்கும் போதுகளில்
தடி கொண்டே அது சாத்தும்.
நாட்கள் நகர்ந்து வளர வளர
நாக்குத் தள்ளி மூச்சும் இரைக்கும்..
ஓடுதல் சாத்யமற்ற ஒரு பெரும் போர்க் களத்தில்
ஓய்வு கேட்டு கால்கள் ஓயாமல் தினம் கெஞ்சும்.
உறுதி நெய்த உருக்கு மனிதர்
ஓதுவர் செவியில் நூறு மந்திரம்.
ஆயினும் உள்திரள் கொள்திறன் இழக்கும்.
ஒளிர்ந்திடும் இருட்டில் உள்மொத்தம் விழிக்கும்..
(சாம்பவி மகா முத்ராவில் கண் மூடி இருளில் கண்ட ஒளி )


Comments
Post a Comment