காண தொலை -29-31

 மறையூர்( 29) 

மூணாறில் இருந்து எழுபது கி மி தொலைவில் இருக்கிறது மறையூர்.

   கலைநயமிக்க ஒரு பிரமாண்டமான மகாலையும்,  மீனாட்சியம்மனுக்கு கூடுதலாக ஒரு கோபுரமும்,அழகு மிளிரும் புது மண்டபமும், பேரெழில் மிளிரும் தெப்பகுளமும்,தல்லாகுளத்தில் ஒரு பெருமாள் கோவிலும், என்று பாரத்து பார்த்து மதுரையினை அழகுசெயத திருமலை நாயக்கர் சதியால் மரணமடைகிறார். அவருக்கு விசுவாசமாக இருந்த படைவீரர்களால் இதனைத் தாங்க முடியவில்லை. மனம் வெதும்பும் அவர்கள் மதுரையை விட்டு விலக முடிவு செய்கிறார்கள்.


தங்கள் குடும்பத்துடன் மூட்டை முடிச்சுகளை முதுகில் சுமந்து கொண்டு அவர்கள் பயணம் செய்து போடி மெட்டு வழியாக மூணார் வந்தடைகிறார்கள். மலைகள் பற்றியும் மண்
  வளம் குறித்தும் அபார அறிவு கொண்ட அவர்கள் மறையூர் எனப்படும் ஊரருகில் உள்ள ஒரு வட்ட மலை உச்சியில் தங்க முடிவு செய்துவிடுகிறார்கள். முதுகில் சுமைகள் சுமந்து வந்த அவர்களை முதுவன் என்று அந்த ஊர் மக்கள் அழைக்கிறார்கள். மலையில் தங்கி அவர்கள் அதன் மைந்தர்களாகி அங்கேயே காலம்  காலமாக மலைஜாதியினராக வசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

,


மறையூரில் அவர்கள் தங்கிய தொகுப்பில் இருக்கும் அவர்களது அந்திமக் குடில்கள் டால்மியன்ஸ் என அழைக்கபடுகிறது. இறக்கும் தருவாயில் வயது மூத்த முதுவர்களை இங்குள்ள கல் குடில்களில் உணவுடன் விட்டு  விடுவார்கள். அவர்கள் இறந்ததும்  அந்தக் கல்  அறை நினைவுகள் உடன் நினைவுக் கல் கொண்டு மூடப்பட்டு விடும். மறையூர் மலைகளில் அவர்கள் குடும்பத்துடன் புழங்கிய சாட்சியாக பானை ஓடுகளும், காசுகளும்,கல் அறைகளும், அதிக அளவில்  தென்படுகிறது.



 


மறையூரில் பிரபலமான மற்றும் ஒரு இடம் உள்ளது. சந்தனக் காடுகள். அரிய சந்தன மரங்கள் பெரும் பரப்பில் காணபடுகிறது. இங்கு உள்ள சந்தன மர ஆலையில் ஒரு சிறிய குப்பி சந்தன எண்ணெய் பல ஆயிரம் ரூபாய் மதிப்பில் விற்பனை ஆகிறது. மறையூர் வயல்களில் வெல்ல ஆலைகள் அதிகம் தென்படுகிறது. காற்றில் சந்தன மணமும் மண்ணில் நம் மூதாதையர் வாசமும் தட்டுப்படும் மறையூர் ஒரு அழகிய கேரள கிராமம்.

பாதிராமணல் தீவு. (30) 

 



ஆலப்புழையில் இருந்து வேம்பநாட்டு ஏரியின் உப்பங்கழியில் இரண்டு மணி நேரம் ஒரு ஹவுஸ் போட் வாடகைக்குப் பேசிக்கொண்டு நீரைக் கிழித்துக் கொண்டு புறப்பட வேண்டும். குமரகக் கரை எல்லாம் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள். வெள்ளைக்காரர்கள்.. சினிமாக்காரர்கள்.. அரசியல்வாதிகள் எனப் பலரும் எண்ணெய் தேய்த்துவிட்டு சூர்யக் குளியல் செய்தவாறு இருப்பதைப் பார்த்தவாறே பயணம் செய்தால் ஒரு நாற்பது நிமிடத்தில் நாம் வந்தடையும் இடம் பாதி ரா மணல் தீவு. Midnight sand island. இந்தத் தீவு முழுவதும் மிக அரிய வகை மருத்துவ மூலிகைகள்.  ஆசான்கள் அதிகாலையில் மருந்து இலைகள் பறிக்க இங்கு அவரவர் வள்ளத்தை எடுத்து வந்து தேடும் காட்சியும் நூற்றுக்கும் மேற்பட்ட மைக்ரேட்டரி பறவைகள்  பல தினுசில் மரங்களில் அப்பிக் கொண்டு  ரீங்கரிக்கும் காட்சியும் காணவே அவ்வளவு அற்புதமாக இருக்கும். ரும் இங்கு இல்லை. அதனால் இயற்கை அதன் கலப்படமற்ற அழகை இன்னும் இழக்காமல் இருக்கிறது.

 


 ஆதிரப்பள்ளி (31)

 

ஆதிரப்பள்ளி எஸ்டேட் நெடுக சாலைகளில் பாமாயில் தயாரிக்கும் பணங்காய்கள் விழுந்து கிடக்கிறது. எங்கும் ரப்பர் தோட்டம் . மற்றும் பனங்காடு. வளச்சலை நெருங்கும்போதே சிலு சிலுவென்று காற்று அள்ளுகிறது. வளச்சல் வரை அமைதியாக ஓடி வரும் நதி  பெரும் ஆரவாரத்துடன் ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியாக இங்குதான் பாய்கிறது. கமலஹாசன் இறங்கிப் போன இடத்தை கழிகள் போட்டு தடுத்து இருக்கிறார்கள். வெள்ளை நுரை பீய்ச்சி கண்ணை மறைத்து வீழ்கிறது ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி.





 



.

Comments