காண தொலை- 28

 நாளைக்கு ஓணம். கடவுளின் தேசத்தில் , கடவுளின் கால்பெருவிரலில் அழுத்தப்பட்டு  உள் அமிழ்ந்த மாபலி மன்னன் தனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தின் மூலம் , வருடம் ஒருமுறை  வந்து தனது பிரஜைகளைக் காண வரும் தினம். இன்னும் ஒரு ஒரு வாரம் அவரது ஆய்வு அங்கு இருக்கும். ஊரே விழாக்கோலம் கொண்டிருக்கும். இயன்றவர் இயலாதவர் என்ற பேதமின்றி தங்கள் அரசனை வரவேற்க எல்லாப் பிரஜைகளும் அமர்க்களப்படுத்திக் கொண்டிருப்பார்கள். எனவே இந்த வாரம் முழுவதும் காணத் தொலைந்த இடம் கடவுளின் தேசம் மட்டுமே..

 வசீகரிக்கும் வாகமன்..

 வண்டிப்பெரியார் தாண்டி பீர்மேடு. அது  தாண்டி ஏலப்பாறை. பிறகு குட்டிக்கானம். அப்புறம் வாகமன். இந்த மலைபிரதேசம் மத்திய திருவாங்கோரில் அமைந்துள்ள ஒரு குட்டி தேயிலை தோட்டங்கள் சூழ்ந்த  நகரம்.

இன்னும் வணிகமயமாகாத கன்னி நிலம். எங்கும் பச்சை போர்த்திய மலைகள், பைன் மரக் காடுகள், மேடோஸ், தனித்திருக்க, தவமிருக்க, மலைகளில் சாகசப் பயணம் நடக்க, ஆன்மிக விசாரம் செய்ய,புரட்சிகர செயல்பாடுகளின் போது விரட்டல்களை மீறி, தப்பித்து வந்து ஒளிந்து கொள்ள, வாகான மண் வாகமன்.

 பீர்மேடு முழுவதும் நமது தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டத்தில் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் கிறித்துவின் மீது விசுவாசம் வைத்தவர்கள் வணங்க ஒரு அழகிய தேவாலயம் பீர்மேட்டில் இருக்கிறது. பட்டு மலை என்று அவர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அந்தப் பகுதியில் அமைந்துள்ள அந்தப்  பிரம்மாண்ட ஆலயம் பட்டுமலைமாதா கோவில் என்றே அழைக்கப்படுகிறது. அதிகாலையில் வீசும் சீதளக் காற்றில் மனசு லேசாகி உடலை விட்டு விலகி வெளியில் நின்று சென்று  உள்ளே கவனிக்கிறது. பெரும்பாலும் உழைக்கும் மக்களே நிரம்பியுள்ள இந்தப் பகுதியில் சுவிசேஷ செய்திகள் சொல்வதற்கென்றே இந்தப் பிரம்மாண்ட தேவாலயத்தில் ஒரு போதகர் பள்ளி இருக்கிறது. ஆலயம் கொள்ளை அழகு. போர்த்துகீசிய மற்றும் கோதிக் பாணியில் கட்டிடக் கலை அமைந்துள்ளது.

 


வாகமன் அழகிய மூன்று மலைத்தொடர்கள் சூழ அமைந்துள்ளது. மூன்று மலைகளும் மூன்று நம்பிக்கை மலைகள். முதல் மலை ஒரு சூபி துறவியின் தர்கா அமைந்துள்ள தங்கள் பாறை. சுமார் 800 வருடங்கள் முன்பு இங்கு வந்த சூபி துறவியான ஹஸ்ரத் ஷேக் பைருதீன் பாபா தனது முப்பதுக்கும் மேற்பட்ட சீடர்களுடன் இங்குதான் தங்கி இருந்தாராம். எல்லா ஊரிலும் சொல்லப்படும் மிகை கதை போல் இங்கும் ஒரு கதை சொல்லபடுகிறது. அந்த பெரிய குண்டு பாறையில்தான் ஹஸ்ரத் பாக்கு இடித்துக் கொள்வாராம். அந்தப் பாறை அடியில் இருந்துதான் இப்போதும் தங்கல்கள் பாத்தியா ஓதிக் கொண்டுள்ளார்கள்.   கோலாகலமேடு எனப்படும் இங்கு நடக்கும் வருடாந்திர உர்ஸ் திருவிழாவில் வழங்கப்படும் சக்கரை கஞ்சி அவ்வளவு ருசியாக இருக்குமாம்.

 இரண்டாம் மலை குருசுமலை எனப்படும் கத்தோலிக்க கிறிஸ்துவர் வழிபாட்டுத்தலம். சினாய் மலைத்தொடர்களின் அடர்வனத்தில் மோசசிற்குக் கிடைத்த காட்சிப்பாடு.. கல்வாரியின் குளிர் இரவுகளில் தனது பிதாவுடன் மானசிகமாக சம்பாஷித்து உருகிய தேவகுமாரனின் முழு இரவு  பிரார்த்தனைகள். .மலைகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் இருக்கும் நெருங்கிய உறவு பிரான்சிஸ்ஆச்சர்யாவினை இங்கு ஒரு அழகிய வழிபாட்டுத்  தலம் அமைக்கச் செய்தது. இதில் என்ன விசேடம் என்றால் அங்கிருக்கும் தேவாலயம் ஆஸ்ரம் என்று அழைக்கப்படுகிறது.இந்துக்களின் வழிபாட்டு முறை இங்கு காணப்படுகிறது.  பெல்ஜியத்தில் பிறந்த ஜான், சிச்டேர்சியன் துறவியாக ஆனதும் பிரதர் பிரான்சிஸ் என அழைக்கப்பட்டார். இவர் 1955 ல் கேரளா வருகிறார். 1968 இந்தியக் குடியுரிமை பெரும் இவர் மகாத்மா காந்தியின் பெரும் பக்தர்.

 


1950 ம் வருடத்தில் திருச்சிராப்பள்ளி அருகில்,, காவிரிக்கரையில்  இந்திய ஆன்மிக மரபுப்படி ஒரு ஆசிரமம் அமைக்கப்பட்டது. அதனை நிறுவியவர்கள் பிரான்ஸ் மிஷனரியான அப்பே ஜே. மொஞ்சனின் ( சுவாமி பரம அரூபி அனந்தா) மற்றும் பெனெடிக்  சபை துறவியான ஹெச்ச். லே. சாவ (சுவாமி அபிசிக்தானந்தா) . சாந்தி வனம் என்றும் சச்சிதானந்த ஆஸ்ரம் என்று  அழைக்கப்பட்ட அந்த ஆசிரமத்தில் பிரதர் பிரான்சிஸ் வெகு காலம் பயின்று அதன் தாக்கத்தில் இந்திய ஆன்மிக மரபில் ஒரு கிறிஸ்துவ ஆஸ்ரமம் கேரளாவில் ஆரம்பித்தார். அதுவே குருசிமலை ஆஸ்ரமம். ஓம் சிரி யேசு பகவக்தேய நமஹா என்று ஒலிக்கும் ஆனந்தமய வாக்கு தவிர்த்து முற்றிலும் நிசப்தமே அங்கு இறை வழிபாடாக இருக்கிறது. அங்கிருப்பவர்கள் 16 சன்யாசிகள் 1 பிரமச்சாரி, 3 சாதகர்கள்.


புனித வெள்ளிகளில் தொலை தூரங்களில் இருந்து வரும் பக்தர்கள் சைரோ மாலன்கர கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் குருசிமலையின் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள சிச்டேரியன் மடாலயத்திற்கு,   கனமான மரச் சிலுவைகளை தோளில் சுமந்தபடியும்  தேவகுமாரன் பட்ட அத்தனை துயரினையும் நெஞ்சில் ஏந்தியபடியும் மலையேறி செல்லும் காட்சி உணர்வுபூர்வமாக இருக்குமாம். இறைவனை  கை கூப்பி தொழுதால் என்ன அல்லது மண்டியிட்டு தொழுதால் என்ன? என்று மலை உச்சியில் உள்ள போதகர்கள் கேட்கிறார்கள்.    கைகூப்பித் தொழுது கொண்டும் மண்டியிட்டு அழுது கொண்டும் துயரர்கள் சிலுவை சுமந்து மலையேறிக் கொண்டிருக்கிறார்கள்.

அப்புறம் மூணாவது மலை நம்ம முருகன் மலை. ஆயிரம் வருடம் பழமையான ஆலயம் ஒன்று இங்கு இருக்கிறது. தமிழ்க் கடவுள் முருகனை வழிபட பெருமளவில் மக்கள் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் ஆசி தர அழகு கூடிக் கிடக்கிறது வாகமன். வாகமனை விடவும் அழகு வாகமனுக்குப்  போகும் பாதை. சுற்றிலும் சுற்றிலும் தேயிலைத் தோட்டம். திடுமென தலைக்கு மேலே பறக்கும் பாரா கிளைடர்கள்.. ரீங்கரிக்கும் பல்வேறு உயிரினங்கள்..

வாகமன்  போய் அடைந்ததும் நம்மை வசீகரிப்பது அங்கிருக்கும்  மொட்டைக்குன்னுகள். Barren meadows.. பைன் காடுகள்.. லேக்.. சிறு சிறு நீர்வீழ்ச்சிகள்..பெரிய பெரிய அடர்  வனங்கள்.. வன மியுசியம்..





வாக்கும் மனமும் சுத்தமாக.. வாகாய்  மனமும் வசமாக.. வாகமன்  போய் வாருங்கள் ஒரு தரம்.  




Comments