காண தொலை -26


 

காண தொலை – 26

National fossil parks @ Aravakkarai & Sathanur


பல நூறு ஆயிரம்  வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த  உயிரினங்கள் , தாவரங்கள், மரங்கள்  இவையெல்லாம் காலப் போக்கில் மக்கிப்  போகாமல் , சமயத்தில்,  புதை படிவமாக மாறிப்  பூமியிலே புதைந்து போகிறது.

அகழ்வாராய்வில் கிடைக்கும் இதுமாதிரி பல நூறு வருடம் பழமையான  விலங்குகளின் எலும்புக்கூடுகள்  போன்றவை புராதன வாழ்க்கை முறைமை பற்றியும் அந்தக் காலத்தில் இருந்த உயரினங்கள் பற்றியும் அறிய உதவுகிறது.  இந்த புதை படிவங்கள் ஆங்கிலத்தில் FOSSILS என அழைக்கபடுகின்றது.

தமிழகத்தைப் பொறுத்த மட்டில் இரண்டு முக்கியமான இடங்களில் இது மாதிரி புதை படிவங்கள் காட்சிப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

2 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதல் இடத்தின் பெயர் திருவாக்கரை. 

120 மில்லியன் ஆண்டுகள் பழமையான இரண்டாம்  இடத்தின் பெயர் சாத்தனூர்.

இரண்டு மில்லியன் ஆண்டு வயதானது புதுச்சேரியில் இருந்து 35 கி. மி. தொலைவில் உள்ள திருவாக்கரை. இந்த இடத்தின் பரப்பளவு 247 ஏக்கர்கள். இருபது இலட்சம் ஆண்டுகள் முன்பு அந்தப்  பகுதி கடலாக இருந்து  பின் கடல் பின்வாங்கி இருக்கிறது. பல லட்சம் ஆண்டுகள் கடலுக்கு அடியில்  புதைந்து போன பெரிய பெரிய மரங்கள் எல்லாம் அப்படியே கல்லாகிப் போன அதிசயம் இங்கே காணக் கிடைக்கிறது.  இந்திய புவியியல் மையம் இதனை  தேசிய கல் பூங்கா என்று அறிவித்து தொல்பொருள் துறை கட்டுபாட்டில் பாதுகாத்து வருகிறது. எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய மரக் கல் தூண்கள்.

மரத்தின் உள்ளே உள்ள ஆர்கானிக் சமாசாரத்தை காலம் சிலிக்கான் ஆக மாற்றி புதை படிவ சிதை மாற்றம் நிகழ்த்தி விட்டது. மரமாக இருந்த போது தன்னகத்திருந்த வண்ணத்தையும் வடிவத்தையும் நிறுத்திக் கொண்டு கல்லாகச் சமைந்து நிற்கிறது காலம் காலமாய்.


அடுத்த அதிசயம்  120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த சாத்தனூர் . திருச்சி பெரம்பலூரில்  இருந்து கி,மி. தூரத்தில் இருக்கிறது சாத்தனூர். போகும் இடமெல்லாம் வெளேர் என்றிருக்கிறது பூமி. கடல் இடம் பெயரும் முன்பு சமுத்திரமாக இருந்த இடம். பல்வேறு கடல் உய்ரினங்களின் கால்சிய எச்சங்கள் பூமி முழுவதும் வெண்மை போர்த்தி இருக்கிறது. இங்கு உள்ள தேசிய கல் பூங்காவில் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட டைனோசர் முட்டையின் புதை படிவம் பாதுகாக்கபடுகிறது. ஒரு நீளமான கல்மரம் ஒரே நெட்டில் படுத்திருக்கிறது. கல்லாகிப் போன ஆமை ஒரு புறம், 


வருத்தப்பட வேண்டிய விடயம் இந்த இடத்திற்கு உரிய சிறப்பு சரியான முறையில் வெளித் தெரியவில்லை என்பதுதான். பெரம்பலூர் போகும் வழியில் உள்ள அந்த இனிப்பு பண்டைக் கடை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது.  இன்னும் இத்தனை கிலோ மீட்டரில் வந்து விடும் என்று அறிவிப்பு நெடுஞ்சாலை முழுக்க  பண்டகசாலைகளுக்கு வைக்கப்படிருக்கிறது. அனைவருக்கும் தெரிகிறது. அனால் நமது புராதனப் பெருமைகள் வலுவாக வெளிகளில் விளம்பரமாகாத  விளைவு நாம் பெரும் கீர்த்தி  பெற்ற வாள்களால் வெங்காயங்களைத்தான்  அரிந்து கொண்டிருக்கிறோம்.

 

 

 

 

 

 

 

Comments